போப் ஃபிரான்சிசுக்கு மீண்டும் மூச்சுக் கோளாறு : மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.

போப் ஃபிரான்சிசுக்கு மீண்டும் திங்கட்கிழமை பிற்பகல் இரு முறை மூச்சுக் கோளாறு ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக வத்திகன் தெரிவித்தது.

போப்பின் நுரையீரலில் உள்ள சளியை உடனடியாக அகற்ற வேண்டிய கட்டாயம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டது. இருப்பினும் அவர் விழிப்புடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

88 வயதான போப்பாண்டவர் தனது சுவாசத்திற்கு உதவ பிராண வாயுவையும் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகளையும் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். 18 நாட்களுக்கு முன்பு நிமோனியாவால் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன் பிறகு மூன்றாவது முறையாக அவருக்கு தீவிர சுவாசக் கோளாறு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை, போப் பிரான்சிஸ் வாந்தியுடன் சுவாசப் பிரச்சினையைச் சந்தித்தார் என்று வத்திகன் தெரிவித்தது.

அப்போது பிராணவாயு சிகிச்சைக்கு அவரது உடல் நன்கு ஒத்துழைத்தது.

இதனால் அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள், பிராண வாயு சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை அவர் மீண்டும் பாதிக்கப்பட்டதால் செயற்கை சுவாசக் கருவி மீண்டும் பொருத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.