ஊடகங்கள் கூறுவதை அப்படியே நம்ப வேண்டாம்… வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு புதிய வரி எதுவும் விதிக்கப்படவில்லை… பிரதமர் ஹரினி !

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு புதிய வரி எதுவும் விதிக்கப்படவில்லை என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை அப்படியே நம்ப வேண்டாம் என்று அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
“வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் ஆதாரமற்ற பொய் என்றும், அத்தகைய வரி பட்ஜெட்டில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றும் பிரதமர் டொக்டர் ஹரினி அமரசூரிய கூறினார்.”
“வெளிநாட்டு சேவை வழங்குவதற்கான வரி பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஊடகங்களில் பல நேரங்களில் தவறான தகவல்கள் வெளியாகின்றன. வெளிநாட்டு சேவைகளுக்கான வரி முந்தைய அரசாங்கத்தில் 30 சதவீதமாக இருந்தது, இப்போது 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.”
“இதுதான் பல்வேறு தரப்பினரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு புதிய வரி எதுவும் விதிக்கப்படவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். ஊடகங்களில் உள்ள அனைத்தையும் நாம் அப்படியே நம்பக்கூடாது.” என்றார் அவர்.