ராஜஸ்தானில் ஹோலி கொண்டாட்டத்தில் தன் மீது சாயம் பூசியதை எதிர்த்த இளைஞர் கொலை

ராஜஸ்தான் மாநிலம் தௌஸா மாவட்டத்தில் தன் மீது சாயம் பூசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தௌஸா மாவட்டத்தின் ரல்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் (வயது 25) என்ற இளைஞர் கடந்த மார்ச்.12 அன்று மாலை அங்குள்ள நூலகத்தில் அரசு தேர்வுக்காக படித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அஷோக், பாபு மற்றும் காலுராம் ஆகியோர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஹன்ஸ்ராஜின் மீது சாயம் பூச முயற்சித்துள்ளனர்.
அதற்கு ஹன்ஸ்ராஜ் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கோவமடைந்த அவர்கள் மூவரும் ஹன்ஸ்ராஜை கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவரை பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த கொலையால் கோவமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் ஹன்ஸ்ராஜின் உடலுடன் தேசிய நெடுஞ்சாலையை முடக்கி நேற்று (மார்ச் 13) அதிகாலை 1 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், கொலையாளிகள் மூவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் கொலை செய்யப்பட்ட ஹன்ஸ்ராஜின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
பின்னர், காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு அவரது உடல் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.