500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி , அர்ஜுனா எம்.பிக்கு நோட்டீஸ்!

பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராமநாதன் அர்ஜுனா பேஸ்புக் சமூக ஊடகத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோட்டீஸ் கடந்த மார்ச் 10 ஆம் திகதி வழக்கறிஞர் பாலச்சந்திர தினேஷ் தனது வாடிக்கையாளரான , 59 வயது ஜெர்மன் குடிமகனான ரத்னம் ஸ்ரீஹரன் சார்பாக அனுப்பியதாக தெரியவந்துள்ளது.
அர்ஜுனா ராமநாதன் மற்றும் எச்.பி. சமரகோன் ஆகியோர் 2025 பிப்ரவரி 12 ஆம் திகதி பேஸ்புக்கில் வெளியிட்ட அவதூறான கருத்துக்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீஹரன் குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டதன் விளைவாக, ஸ்ரீஹரனின் மனைவி மற்றும் மகள் கடுமையான மன உளைச்சலுக்கும் , பொது அவமானத்திற்கும் ஆளானதாகவும், ஸ்ரீஹரனின் நற்பெயருக்கு கடுமையான சேதம் விளைவித்ததாகவும், அவரது தொழில் வாழ்க்கையில் களங்கம் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நடத்தை தொடர்பாக அர்ஜுனா ராமநாதனுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அவர் அதை கவனத்தில் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், பொருத்தமற்ற கருத்துக்கள் மற்றும் வன்முறை சமூக ஊடக நடவடிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகரிடமிருந்தும் அவர் எச்சரிக்கைகளை பெற்றுள்ளார்.
இன்று அவரது நடவடிக்கைகள் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
இருப்பினும், வழக்கறிஞர் பாலச்சந்திர தினேஷ் அனுப்பிய நோட்டீஸில், எம்.பி. வெளியிட்ட அவதூறான கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், பகிரங்கமாக எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், குறிப்பாக பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க உறுதியளிக்க வேண்டும் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 14 நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என , அந்த நோட்டீஸில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.