பிரதமர் மோடி இலங்கை செல்லக்கூடாது: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்து

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் பேசியபோது, கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
ஜனவரி 25ஆம் திகதி முதல் 45 நாள்களில் பல்வேறு தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை அழிக்க இலங்கை கடற்படை விரும்புகிறது என்றும் வைகோ சாடினார்.
“இந்திய கடற்படை அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது? நாங்கள் இந்திய அரசுக்கு வரி செலுத்துகிறோம். தமிழக மீனவர்கள் என்ன அனாதைகளா?
“நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்குச் சென்று அந்நாட்டின் ஆட்சியாளர்களைச் சந்தித்தார். நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அதேபோல் சந்தித்தார். ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை,” என்றார் வைகோ.
பிரதமர் மோடி என்ன காரணத்துக்காக இலங்கை செல்கிறார்? இலங்கை அரசுக்கும் அதன் கடற்படைக்கும் கண்டனம் தெரிவிக்கப் போகிறாரா? எனக் கேள்விகளை எழுப்பிய அவர், இன்றளவும் ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனர்கள் இந்திய அரசிடம் நீதி கேட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து வைகோவுக்குப் பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
“நமது மீனவர்களுக்கு உதவுவதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் இந்திய அரசு வீணடிக்கவில்லை. நமது மீனவர்களுக்கு எப்போது எல்லாம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோ அப்போதெல்லாம் நமது வெளியுறவு அமைச்சரும் பிரதமரும் உதவி இருக்கிறார்கள்,” என்றார் நிர்மலா சீதாராமன்.