தேவநுவர இரட்டைக் கொலை வழக்கில் மேலும் 4 சந்தேக நபர்கள் கைது

மாத்தறை, தேவநுவரவில் இரு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் இந்த சந்தேக நபர்கள் , வென்னப்புவ பகுதியில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21ஆம் திகதி இரவு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. யோமேஷ் நதீஷன் மற்றும் பசிந்து தாரக என்ற 28 வயது இளைஞர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து பெறப்பட்ட போதைப்பொருள் தொகையை திருடியதன் விளைவாக தேவனுவர இரட்டைக் கொலை நடந்ததாக கந்தர பொலிஸார் கடந்த 23ஆம் தேதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை தெரிவித்தனர்.

இதற்கு முன்பு கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் உள்ள பெண், இந்த இரட்டைக் கொலையை செய்த கூலி கொலையாளியின் மனைவி என்றும் கூறப்படுகிறது. முதலில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட நான்கு சந்தேக நபர்களும் 07 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்புக்காவல் உத்தரவு நாளை (29) முடிவடைகிறது.

Leave A Reply

Your email address will not be published.