இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு: விஜய் கட்சி பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள்

இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, தொகுதி மறுவரையறை தேவையில்லை போன்ற 17 தீர்மானங்கள் தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திருவான்மியூரில் தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. உறுதிமொழியோடு தொடங்கிய கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 2,100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கட்சி தொடங்கப்பட்ட பின்பு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
பொதுக்குழு கூட்டத்தில், மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும், இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தேவையில்லை, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு , மீனவர்கள் போராட்டத்துக்கு தீர்வு, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் என மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுகளில் நடந்த தவெகவின் கல்வி விருதுகள் வழங்கும் விழாவுக்கு தவெக தலைவர் விஜய் எப்படி முன்கூட்டியே வருகை தந்தாரோ அதேபோல், இந்த பொதுக்குழுக் கூட்டத்துக்கும் காலை 6.30 மணிக்கே வருகை தந்து முன்னேற்பாடுகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து காலை 10 மணியளவில் வழக்கம் போல் வெள்ளை சட்டையுடன் அரங்குக்கு விஜய் வந்தார்.
அப்போது அரங்கில் கூடியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களைப் பார்த்து கையசைத்தவாறும் கும்பிட்டவாறும் மேடைக்கு வந்தார். உறுப்பினர்களும் “தவெக, தவெக” என முழக்கமிட்டு விஜய்க்கு வரவேற்பளித்தனர்.