முதல்வர் மு.க. ஸ்டாலின், இளையராஜாவுக்கு ஜூன் 2ல் பாராட்டு விழா நடத்துகிறார்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அரசு சார்பில் ஜூன் 2ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேசுகையில், “லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் முடிந்து தமிழகம் திரும்பிய இளையராஜாவுக்கு நல்வரவேற்பு அளிக்கப்பட்டது.
“என்னை அவர் சந்தித்தபோது சிம்பொனி இசை நிகழ்ச்சியை தமிழகத்தில் நடத்துவது தொடர்பாக அவரிடம் கேட்டேன். சுமார் 400 இசைக்கலைஞர்கள் கொண்ட குழுவை உடனடியாக வரவழைத்து நிகழ்ச்சியை நடத்துவது சிரமம் என்று கூறினார்.
“எனினும், மாபெரும் சாதனைகளைப் படைத்துள்ள இளையராஜாவின் திரையிசைப் பயணம் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அவரது பிறந்தநாளான ஜூன் 2ஆம் தேதி அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது,” என்று கூறினார்.