11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட , கர்ணாகொடவின் மனு விசாரணையில் இருந்து இரண்டு நீதிபதிகள் விலகினர்…

அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கர்ணாகொடவின் மனு விசாரணையில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் இன்று அறிவித்தனர்.

நீதிபதிகள் திலீப் நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளனர்.

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக அப்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கர்ணாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுவதற்கு சட்டமா அதிபர் எடுத்த முடிவுக்கு எதிராக காணாமல் போன இளைஞர்களின் உறவினர்கள் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு இன்று திலீப் நவாஸ், ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் திலீப் நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் தெரிவித்தனர்.

அதன்படி, உண்மைகளை உறுதி செய்வதற்காக இந்த மனு செப்டம்பர் 15 ஆம் தேதி வேறு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.