போதைப்பொருளுடன் மனைவியும் துப்பாக்கியுடன் கணவனும் கைது!

வத்தளை விடுதியில் சுயநினைவின்றி இருந்த பெண் போதைப்பொருளுடனும், அவரது கணவன் ரி -56 ரக துப்பாக்கியுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வத்தளை – ஹேகித்த வீதி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த கொழும்பு – 15 பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று சுயநினைவின்றி இருக்கின்றார் என்று வத்தளை பொலிஸாருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபரான பெண்ணுக்கு முதலுதவி அளித்து அவரை விசாரணை செய்தபோது சந்தேகநபரான பெண்ணிடமிருந்து 6 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், சந்தேகநபரான பெண் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றார் என்று தெரியவந்தது.

பின்னர் சந்தேகநபரான பெண்ணுக்குச் சொந்தமான ராகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றைப் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

குறித்த சோதனை நடவடிக்கையில் ராகம பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்து சந்தேகநபரான பெண்ணின் 40 வயதுடைய கணவன் ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் 113 தோட்டாக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
……….

Leave A Reply

Your email address will not be published.