மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் இதய அறுவைச் சிகிச்சை செய்து 7-க்கும் மேற்பட்டோரை கொலை செய்த போலி மருத்துவர்!

மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் இதய அறுவைச் சிகிச்சை செய்து 7-க்கும் மேற்பட்டோரை போலி மருத்துவர் ஒருவர் கொலை செய்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமோ மாவட்டத்திலுள்ள கிறிஸ்டியன் மிஷனரி மருத்துவமனையில், பிரட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணரான என்.ஜான் கெம் எனக் கூறி ஒருவர் மருத்துவராக பணியில் சேர்ந்துள்ளார். பின்னர், ஒரு மாதத்திற்குள்ளாகவே அவர் இதய அறுவைச் சிகிச்சை செய்த நோயாளிகளில் 7 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அறுவைச் சிகிச்சை செய்தது போலி மருத்துவர் எனவும் அவரது பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர் அவர் மீதுள்ள சந்தேகத்தினால் ஜபால்பூரிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதாகவும் அவர் மீது ஹைதரபாத்தில் ஏற்கனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமோ மாவட்டத்தின் குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவரும் வழக்கறிஞருமான தீபக் திவாரி கூறுகையில், அவர் மேற்கொண்ட அறுவைச் சிகிச்சையினால் பலியானவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கைதான் 7 எனவும் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனக் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த மருத்துவமனையானது அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வரும் நிலையில் அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், முழுமையான விசாரணைக்கு பின்னரே தனது அறிக்கை வெளியாகும் என தமோ மாவட்ட ஆட்சியர் சுதிர் கோசார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரிட்டன் மருத்துவர் ஜான் கெம் போன்று தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள் மூலம் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ்அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு கலவரத்தைக் கட்டுப்படுத்த உத்தப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அங்கு அனுப்பப்பட வேண்டும் எனக் கூறி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது மிகவும் விமர்சனத்திற்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.