அழைப்பு வந்தும் மோடியை டக்ளஸ் சந்திக்காதமை ஏன்? – ஈ.பி.டி.பி. விளக்கம்.

“பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான அழைப்பு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று சந்திப்பதற்குக் கால அவகாசம் போதாமையினால் குறித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.”

இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்தார்.

“இருந்தும் எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர் தொடர்பான எமது வலியுறுத்தல்கள் பாரதப் பிரதமரிடம் ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது.” – என்றும் ஸ்ரீகாந் குறிப்பிட்டார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின்போது ஏனைய பல தமிழ் அரசியல் தரப்பினர் அவரைச் சந்தித்திருந்தனர். அந்தவகையில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் பங்குபற்றாமை குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கருத்துக் கேட்டபோதே ஸ்ரீகாந் மேற்கண்டவாறு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.