அமெரிக்க வரிக்கு என்ன செய்வது? ஜனாதிபதி IMF உடன் பேச்சுவார்த்தையில் …..

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இங்கு, இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் எட்டப்பட்டுள்ள விரிவுபடுத்தப்பட்ட கடன் வசதி (EFF) திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வு தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் இடம்பெற்றது.
திட்டத்தின்போது இலங்கை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால நிதி இலக்குகளை அடைவது குறித்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு காரணமாக இலங்கை எதிர்கொள்ள வேண்டியுள்ள பொருளாதார சவால்கள் தொடர்பாகவும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.
சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பிரதிப் பணிப்பாளர் சஞ்சய் பந்த், சிரேஷ்ட தூதுக்குழு தலைவர்களான பீட்டர் ப்ரூவர், ஈவான் பப்பாஜியோரிஜியோ உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.