வடமராட்சியில் மோ. சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். வடமராட்சி, நெல்லியடி நகரப் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் பிரணவன் (வயது 25) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மந்திகை, மடத்தடிப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியது. இந்தக் கோர விபத்தில் படுகாயமடைந்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.