குருநகரில் துருப்பிடித்த நிலையில் துப்பாக்கியும் தோட்டாக்களும் மீட்பு!

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் துருப்பிடித்த நிலையில் ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குருநகர், ஐந்து மாடிக் கட்டடத் தொகுதிக்கு அருகில் உள்ள படகுத்துறையில் பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த படகு ஒன்றை அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் அப்புறப்படுத்த முனைந்தபோது படகின் அடியில் துப்பாக்கி காணப்பட்டுள்ளது.

அது தொடர்பில் யாழ். பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் குழுவினர் துப்பாக்கியை மீட்டதுடன் துப்பாக்கியுடன் ஒரு தொகை தோட்டாக்களையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நீண்ட காலமாக மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்தமையால் துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்றன.

துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.