நெல்லை இருட்டுக்கடையை கணவர் வீட்டார் வரதட்சணையாக கேட்பதாக மணப்பெண் புகார்

நெல்லை இருட்டுக்கடையை கணவர் வீட்டார் வரதட்சணையாக கேட்பதாக மணப்பெண் புகார் அளித்துள்ளார்.
நெல்லையில் ‘இருட்டுக்கடை’ என்ற அல்வா கடை பிரபலமாக உள்ளது. இந்த கடையை ஹரிசிங், கவிதா தம்பதியினர் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஸ்ரீகனிஷ்கா உள்ளார்.
இந்நிலையில், கணவர் வீட்டார் இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்டு மிரட்டல் விடுப்பதாக ஸ்ரீகனிஷ்கா நெல்லை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
இது தொடர்பாக கவிதா ஹரிசிங் கூறுகையில், “எனது மகளுக்கும் கோவையைச் சேர்ந்த பல்ராம்சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் எனது மகளிடம் வரதட்சணை கேட்டு மிரட்டுகின்றனர்.
ரூ.1.5 கோடி மதிப்புள்ள கார் வேண்டுமென்றும் கேட்டதால் நாங்கள் புக் செய்து வைத்திருந்தோம். மேலும், எனது மகளின் கணவர் பல்ராம்சிங் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் எனது மகள் வேதனையில் கடந்த மார்ச் 15-ம் திகதி அன்று கோவையிலிருந்து நெல்லைக்கு வந்து விட்டார். மேலும், எனது மகள் வாழ வேண்டும் என்றால் இருட்டுக்கடை அல்வா உரிமத்தை பல்ராம்சிங் பெயரில் எழுதித்தர வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்” என்றார்.
ஆனால், இவர்களின் கருத்துக்கு கோவையில் பல்ராமின் தந்தை யுவராஜ்சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.