அநுர தரப்பே உண்மையான இனவாதிகள்! – ஜனாதிபதியின் யாழ். உரையைக் கடுமையாகச் சாடிய கஜேந்திரகுமார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தியையும் கடுமையாகச் சாடியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
இவர்கள் ஆட்சிக்கு வர முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில் தமிழ் மக்களுக்கு ஒன்றையேனும் நிறைவேற்றி உள்ளனரா எனக் கேள்வி எழுப்பியுள்ள கஜேந்திரகுமார் எம்.பி., மதவாதம், இனவாத ரீதியாகச் செயற்படுகின்ற இனவாதிகள் என்றும் அநுர தரப்பை அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள தமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடத்திய ஊடக சந்திப்பின்போது நேற்று யாழ். வந்த ஜனாதிபதி ஆற்றிய உரை தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி. கடுமையாக விமர்சித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும் பல்வேறு வாக்குறுதிகளை அநுர தரப்பினர் வழங்கியிருந்தனர்.
அதிலும் தமிழ் மக்கள் விடயத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கும் தீர்வை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வை அவர்கள் ஏற்படுத்தவில்லை. இதுமட்டுமல்லாது இவற்றுக்குத் தீர்வைக் காண்பதற்கு எந்தவித முயற்சிகளையும் அவர்கள் எடுக்கவில்லை.
இவ்வாறாக மக்களை ஏமாற்றித் தொடர்ந்தும் மேடைகளில் ஏறி தம்மைப் புனிதர்களாகக் காட்டி ஏமாற்று வித்தைகளையே அநுர தரப்பினர் செய்து வருகின்றனர்.
தையிட்டி விகாரை விவகாரத்திலும் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாக ஜனாதிபதி அநுர கூறியிருக்கின்றார். தற்போதும் தாமே அதிகாரத்தில் இருக்கின்ற நிலைமையில் முதலில் அந்தப் பிரச்சினைக்கு அவர் உடனடியாகத் தீர்வைக் காண வேண்டும்.
அதைவிடு்த்து தமிழ் மக்கள் விடயத்தில் எதனையும் செய்யாமல் மக்களை ஏமாற்றும் வகையில் மேடைகளில் ஏறி வேறு யார் மீதும் பழியைப் போட்டுவிட்டு தாம் தப்பிக்க முயலக் கூடாது. எனவே, தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு இதயசுத்தியுடன் உடனடியாகத் தீர்வை ஏற்படுத்தத் தாயாரா என ஜனாதிபதியிடம் கேட்கின்றோம்.
மேலும் இனவாதத்துக்கு இடமில்லை என்றும், இனவாதத்துக்குத் தாம் இடமளிக்க மாட்டோம் என்றும் கூறுகின்ற ஜனாதிபதி, இனவாத, மதவாத ரீதியாகப் பரப்புரையைத் தாங்கள் செய்ததை மறக்கக்கூடாது.
தமிழ் மக்கள் விடயத்தில் எப்போதும் இனவாத, மதவாத ரீதியாகச் செயற்படுவது தேசிய மக்கள் சக்தி என்ற ஜே.வி.பி.தான். அந்தக் கட்சியைச் சார்ந்த ஜனாதிபதியின் செயற்பாடுகளும் அவரது பேச்சுக்களும் இனவாதம்தான். அவர்களே உண்மையில் இனவாதிகள்.” – என்றார்.