தியாகங்களால் கட்டமைக்கப்பட்ட விடுதலைத் தீயின் வீரியம் ஒருபோதும் ஓயவேமாட்டாது! – அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வில்…..

இன விடுதலை என்ற இறுதி இலக்கை அடையும் வரை தியாகங்களால் கட்டமைக்கப்பட்ட எங்கள் அறப் போரின் வீரியம் ஒருபோதும் ஓயாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், மாவட்டக் கிளைப் பணிமனையில் இன்று சனிக்கிழமை உணர்வெழுச்சியோடு நடைபெற்ற தியாகி அன்னை பூபதியின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“தியாகத் தாய் அன்னை பூபதியினதும், தியாக தீபம் திலீபனினதும் அஹிம்சைப் போராட்டங்களாலும், அதன்பின்னரான ஆயுதப் போராட்ட காலத்திலும் நிகழ்த்தப்பட்ட உயிர்த் தியாகங்களின் உந்துதலால் உருப்பெற்ற, விடுதலைக்கனலின் வீரியம் குறைந்துவிட்டதாக, எமது மக்களின் விடுதலை தாகத்தை மலினப்படுத்துவோர் மார்தட்டிக் கொண்டாலும், இன விடுதலை என்ற இறுதி இலக்கை அடையும் வரை தியாகங்களால் கட்டமைக்கப்பட்ட எங்கள் அறப் போரின் வீரியம் ஒருபோதும் ஓயப்போவதில்லை.” – என்றார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நல்லூர் வட்டாரக் கிளைத் தலைவி குணலக்சுமி குலவீரசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அருள்செல்வி கனகராசா நினைவுச்சுடரை ஏற்றிவைத்தார். அகவணக்கம், மலர்மாலை அணிவித்தல், மலரஞ்சலி என்பவற்றைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், போராளிகள் நலன்புரிச்சங்க உறுப்பினர் செல்வரட்ணம் தனுபன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.