பிரதமரின் வருகைக்காக பல பிரதேசங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு – மக்கள் கடும் விசனம்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக நெடுங்கேணிக்கு இன்று பிரதமர் ஹரிணி அமரசூரிய வருகை தந்திருந்த நிலையில் பட்டிக்குடியிருப்பு மற்றும் ஒலுமடு பிரதேசங்களுக்கான மின் விநியோக மார்க்கங்களில் மின் துண்டிக்கப்பட்டது என்று பிரதேச மக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.

பிரதமரின் வருகைக்காக அமைக்கப்பட்டிருந்த மேடைப் பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொருத்தப்பட்ட கருவிகளுக்கும் மற்றும் குறித்த பிரதேசத்தில் மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவுமே பட்டிக்குடியிருப்பு, மாராஇலுப்பை, ஒலுமடு போன்ற பிரதேசங்களுக்கான மின்சார விநியோக மார்க்கங்கள் துண்டிக்கப்பட்டு நெடுங்கேணி நகர மத்திக்கு மாத்திரம் மின்சாரம் வழங்கப்பட்டது என்றும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

இந்தச் செயற்பாட்டில் பொலிஸார் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர் என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

இது தொடர்பில் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளினால் தேர்தல் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது சம்பந்தமாக மின்சார சபையின் முறைப்பாட்டுப் பிரிவினரோடு தொடர்பு கொண்டு கேட்டபோது,

“நெடுங்கேணி பிரதேசத்தின் உயர் மின் மார்க்கத்தில் தென்னை மரத்தின் ஓலை ஒன்று அழுத்திய நிலையில் காணப்பட்டமையினால் குறித்த பிரதேசங்களுக்கான மின்சாரம் இடையிடையே துண்டிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்தப் பிரதேசத்துக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டு அதனைச் சீர்செய்தமையே இந்த மின் துண்டிப்புக்கான காரணம்.” – என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.