பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக்கொலை! – அயல் வீட்டு இளைஞர் கைது.

யாழ். பருத்தித்துறை – தும்பளையில் மூதாட்டி ஒருவர் பொல்லினால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜே/404 தும்பளை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மாம்பிரம்பற்றை வீதி, தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது – 69) என்ற மூதாட்டியே இதன்போது உயிரிழந்துள்ளார்.

வீட்டில் திருடும் நோக்குடன் சென்ற இளைஞரே மூதாட்டியைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். மேற்படி இளைஞர் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டில் சகோதரிகளான இரண்டு மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். அதில் ஒருவர் இன்று காலை உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைக்காகத் தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். மற்றையவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

அந்நிலையில் இரண்டு மூதாட்டிகளும் தேவாலயத்துக்குச் சென்றுள்ளார்கள் என நினைத்து, அயல்வீட்டு இளைஞர் வீட்டினுள் களவுக்குச் சென்றுள்ளார்.

அவ்வேளை வீட்டில் இருந்த மூதாட்டி இளைஞர் களவில் ஈடுபடுவதனை அவதானித்ததை அடுத்து இளைஞர் பொல்லினால் மூதாட்டியைத் தலையில் பலமாகத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

தேவாலயத்துக்குச் சென்ற மற்றைய மூதாட்டி வீட்டுக்கு வந்த போது மூதாட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாகக் காணப்பட்டதனை அவதானித்து அயலவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அயல் வீட்டு இளைஞரை தும்பளை, மணல் ஒழுங்கையில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர், கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில், பருத்தித்துறை பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.