பெஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் திருமணமான 7 நாள்களில் உயிரிழந்த இந்திய கடற்படை அதிகாரி!

கர்னால் (ஹரியாணா): ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், திருமணமாகி ஏழு நாள்களேயான ஹரியாணா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த 26 வயதான இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நர்வால் திருமண விடுப்பில் காஷ்மீரில் இருந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது பைசாரன் பள்ளத்தாக்கு. புகழ்பெற்ற துலியன் ஏரிக்கு மலையேறிச் செல்லும் நபர்களுக்கான அடிவார முகாமான பைசாரனுக்கு, பெஹல்காமிலிருந்து நடந்தோ அல்லது குதிரை சவாரி மூலமாகவோ சென்றடைய முடியும்.
அடர்ந்த பைன் மரக் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இந்த இடம் “சிறிய ஸ்விட்சர்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை கூடியிருந்தபோது, பிற்பகல் 3 மணியளவில் பைசாரன் மலையிலிருந்து புல்வெளி பகுதிக்குள் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொடூர தாக்குதலை நடத்தினர்.
இதில், 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த 26 பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலா இருவர், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, குஜராத்தைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.
அதேபோல், உயிரிழந்த 2 வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை
இந்த நிலையில், திருமணம் ஆகி ஏழு நாள்களேயான ஹரியாணா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த 26 வயதான இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்ததை கடற்படை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
வினய் நர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் சேர்ந்துள்ளார். கேரளத்தின் கொச்சியில் பணியாற்றி வந்த நிலையில் ஏப்ரல் 16 ஆம் தேதி அவருக்கு திருமணமாகி ஏப்ரல் 19 ஆம் தேதி திருமண வரவேற்பு நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு விடுமுறைக்காக காஷ்மீரில் இருந்துள்ளார்.
வினய் நர்வால் திருமணத்துக்குப் பிறகு குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பெஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வினய் நர்வால் இறந்த செய்தி இடியாக வந்து சேர்ந்ததாக அவரது பக்கத்து வீட்டார் நரேஷ் பன்சால் தெரிவித்துள்ளார்.
நர்வால் இறப்பு குடும்பத்தினர், சமூகம் மற்றும் பாதுகாப்புத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நாடு நல்ல ஒரு இளம் அதிகாரியை இழந்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் தங்கள் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூரமான தாக்குதலுக்கு பொறுப்பான பயங்கரவாதிகளைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை அனந்த்நாக், பெஹல்காம், பைசரான் ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலாத் தலங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களை தீவிரமாக கண்காணிக்கவும் தில்லி காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.