பெஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியீடு!

பெஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜம்மு – காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர்.
அப்போது ஆயுதங்களுடன் இந்தப் பகுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெஹல்காம் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், காயமடைந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலுக்கு லஷ்கர் – ஏ – தொய்பாவின் மூத்த தளபதி சைஃபுல்லா கசூரி மூளையாகச் செயல்பட்டதாக புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.