இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் எதிர்வரும் திங்கட்கிழமை ரணில் – சட்டத்தரணி ஊடாக அவர் அறிவிப்பு.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் இலஞ்ச, ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவரது சட்டத்தரணி இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கு அறிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமையாற்றியபோது பாடசாலை மாணவர்களுக்குப் புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அதனைப் பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டமை தொடர்பில் இலஞ்ச, ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க கடந்த 10 ஆம் திகதி சாமர சம்பத் தசநாயக்கவின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச, ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

ஆனால், சித்திரைப் புத்தாண்டு காரணமாக ஏப்ரல் 17 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க இலஞ்ச, ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை.

இதனையடுத்து, எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று திங்கட்கிழமை மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டது.

ஆனால், தனது சட்டத்தரணி வெளிநாடு சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பிய பின்னர் இலஞ்ச, ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஆஜராகுவேன் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஆஜராகுவார் என அவரது சட்டத்தரணி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.