படையினரால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் அனைத்து காணிகளையும் விடுவித்தே தீருவோம் – கிளிநொச்சியில் ஜனாதிபதி உறுதி.

போரின்போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான அனைத்து காணிகளையும் மீண்டும் விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.

கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

போரின்போது அழிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசு உதவும் என்றும், போரின்போது மூடப்பட்ட கிளிநொச்சி பகுதியில் உள்ள வீதிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிவோம். இது குறித்து இராணுவ அதிகாரிகள் மற்றும் தளபதிகளுடன் நாங்கள் கலந்துரையாடினோம்.

விடுவிக்கப்படக்கூடிய ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மக்களிடம் திருப்பித் தர நாங்கள் செயற்படுவோம். அது மட்டுமல்லாமல், பாரம்பரியமாக பயிரிடப்பட்ட சில காணிகள் கூகுள் படத்தைப் பார்த்து வனப் பாதுகாப்புத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டன.

இவை இந்தப் பகுதியில் பயிரிடப்பட்ட நிலங்கள், மக்களின் காணிகள், முறையான ஆய்வுக்குப் பிறகு அவற்றைத் திருப்பித் தர நாங்கள் பணியாற்றி வருகின்றோம். மேலும் பல வீதிகளும் மூடப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் கொழும்பு வீதி திறக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதி திறக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் வீதிகள் ஏன் மூடப்பட்டுள்ளன? மக்கள் பயணிக்க அந்த வீதிகள் அனைத்தையும் நாங்கள் திறந்து விடுவோம்.

யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே ஏராளமான வீதிகளை மீண்டும் திறந்துள்ளோம். இந்த நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். போரினால் வீடுகளை இழந்த மக்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

வடக்கில் வீடு கட்ட வசதி இல்லாத ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டுவதற்கு எங்கள் அரசு ஆதரவளிக்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.