விடுதலைப்புலிகள் இயக்க வீடியோக்களை வாட்சப் ஊடாக பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது.

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீடியோக்களை. வாட்சப் ஊடாக பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலாகுமாரி ரத்னாயக்க முன்னிலையில் இன்று (30) சந்தேக நபர்கள் இருவரையும் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை உவர்மலை பகுதியைச் சேர்ந்த பால்பாண்டியன் உதயகுமார் (36 வயது) மற்றும் உப்புவெளி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்தின் கிறிஸ்டி வினோத் (34 வயதுடைய) எனவும் தெரியவருகின்றது.
குறித்து இருவரும் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீடியோக்களை வாட்ஸ்அப் ஊடாக பகிர்ந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட உப்புவெளி பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இதன்போது திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க கட்டளையிட்டார்.
சதாசிவம் நிரோசன்