ஊடகங்களை ஒடுக்குவதில் முழுமூச்சுடன் ராஜபக்ச அரசு சர்வாதிகார ஆட்சியின் உச்சம் என்கிறார் அநுரகுமார

“ஊடகங்களை ஒடுக்குவதில் ராஜபக்ச அரசு முழுமூச்சுடன் செயற்படுகின்றது. இது சர்வாதிகார ஆட்சியின் உச்சக்கட்டத்தை வெளிக்காட்டுகின்றது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”
– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பிரபாகரனின் பெயரை நாடாளுமன்றத்தில் ஆளுந்தரப்பினரே அதிகளவில் உச்சரித்து வருகின்றனர். இந்தநிலையில், பிரபாகரனின் பிறந்த தினமன்று அவரின் படத்துடன் செய்தி வெளியிட்டமைக்காக ‘உதயன்’ மீது பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
பத்திரிகைச் சுதந்திரம் மீது கைவைப்பதற்குப் பொலிஸாருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அந்த அதிகாரத்தைப் பொலிஸாருக்கு வழங்கவும் இந்த அரசுக்கு அனுமதியில்லை.
பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களை ஒடுக்குவதில் இந்த அரசு முழுமூச்சுடன் செயற்படுகின்றது. இதற்கு நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம்” – என்றார்.