ரத்த அழுத்தத்தை தொடர்ந்து, மேல் சிகிச்சை பெற,ரஜினி, அமெரிக்கா செல்ல உள்ளார்.

ரத்த அழுத்த மாறுபாட்டை தொடர்ந்து, மேல் சிகிச்சை பெற, நடிகர் ரஜினி, அமெரிக்கா செல்ல உள்ளார்.
ஐதராபாதில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பின் போது, கொரோனா பரவல் காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினி உள்ளிட்டோருக்கு பரிசோதனை நடந்தது.
அதில், ரஜினிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, உறுதியானது. ஆனாலும், அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, ஐதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில், மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.
பின், சென்னை திரும்பிய ரஜினி, உடல்நிலையை காரணம் காட்டி, அரசியலுக்கு வரப்போவதில்லை என, தெளிவு படுத்தினார்.இந்நிலையில், வாங்கிய சம்பளத்திற்காக, அண்ணாத்த படத்தை, ரஜினி முடித்துக் கொடுக்க வேண்டிஉள்ளது. 75 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், பிப்ரவரியில் இறுதி கட்ட படப்பிடிப்பை, சென்னையிலேயே நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
இதனிடையே, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள ரஜினி, தற்போதைய சூழலில், மேல் சிகிச்சை அவசியம் என, உணர்ந்துள்ளார். அடுத்த சில நாட்களில், அமெரிக்காவுக்கு செல்லவும், அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தற்போது கொரோனாவின் இரண்டா வது தாக்கம் ஏற்பட்டு உள்ள சூழலில், அவர் அமெரிக்கா செல்லாமல், சிங்கப்பூரில் சிகிச்சை பெறவும் வாய்ப்புள்ளது.