எம்.பி. பதவியை இழந்தார் ரஞ்சன் சட்டமா அதிபர் அறிவிப்பு.

எம்.பி. பதவியை இழந்தார் ரஞ்சன் சட்டமா அதிபர் அறிவிப்பு.
நீதிமன்ற அவமதிப்புக்கான தண்டனை காரணமாக ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டது எனச் சட்டமா அதிபர், நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு நேற்று அறிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவவுக்கு 4 வருட கடூழியச் சிறைத் தண்டனையை உயர்நீதிமன்றம் கடந்த 12ஆம் திகதி வழங்கியிருந்தது.
இந்தச் சிறைத் தண்டனை, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், இரண்டு வருடங்கள் 8 மாதங்களில் நிறைவடையும் எனச் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜாவுரிமை, சிறைத் தண்டனை முடிவடைந்ததன் பின்னர் பறிக்கப்படும் எனச் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
அவ்வாறாயின், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 11 வருடங்கள் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இவ்வாறான நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்துக்கு அனுமதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று, சபாநாயகரிடம் வலியுறுத்தவுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்திருந்தார்.