வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மஹிந்தர்! – ‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு அடிக்கல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடும் சுகவீனமுற்றுள்ளார் எனவும், அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும், அவருக்குக் கொரோனா தொற்றியுள்ளது எனவும் மூன்று விதங்களில் சில சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த நிலையில், அந்தச் செய்திகளுக்கு – வதந்திகளுக்கு அவர் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள ‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று அடிக்கல் நாட்டிவைத்தார்
இலங்கையின் நீதித்துறை செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியான நீதி இல்லத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்துள்ளார்.
இலங்கையின் நீதி அமைச்சு உட்பட நீதித்துறை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் இப்புதிய கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்படுகின்றது.
கொழும்பில் 6 ஏக்கர் நிலப் பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தக் கட்டடத் தொகுதிக்கு நிதி அமைச்சு 16 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
நீதி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நான்கு கட்டங்களாக செயற்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தை மூன்று வருடங்களில் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.