போரில் சில தவறுகள் நிகழ்கின்றமை வழமை இப்படிக் கூறுகின்றது அரசு.

போரில் சில தவறுகள் நிகழ்கின்றமை வழமை இப்படிக் கூறுகின்றது அரசு.
“போரில் ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது. தவறுகள் இடம்பெறவில்லை என எம்மால் கூற முடியாது. எனவே, அது குறித்து ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதில் அரசு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளாரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் முற்று முழுதாக தேசத்துரோக செயல் என்பதே எமது நிலைப்பாடாகும்.
ஆணைக்குழுக்களை உருவாக்கி உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலமாக தீர்வுகளை எட்ட முயற்சித்த காலகட்டத்திலேயே 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது எனவும் அவர் கூறினார்.
மங்கள சமரவீர, இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொண்டு நாட்டுக்கு எதிரான நெருக்கடியை 2015 இல் ஜெனிவாவில் உருவாக்கினார்.
எனினும். இறுதி ஜெனிவாக் கூட்டத்தில் திலக் மாரப்பன, 2015 தீர்மானத்தில் இலங்கை அரசமைப்புக்கு முரணான பல சரத்துக்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் அதிகாரம் எமக்கே உள்ளது. சுயாதீன நாடு என்ற அடிப்படையில் அரசு தீர்மானம் எடுக்கும்”என்றார்.