இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்தை உடன் கைவிடுங்கள் அரசை வலியுறுத்தி யாழில் போராட்டம்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில், இன்று காலை 6.30 மணிக்கு இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
“கத்தோலிக்க மக்கள் வாழும் இரணைதீவில், கொரோனா நோயால் உயிரிழந்தோரின் சடங்களை அடக்கம் செய்ய அரசு எடுத்த தீர்மானத்தைகே கைவிடவேண்டும். எமது எதிர்ப்பு முஸ்லிம் மக்களுக்கானது அல்ல” என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் தெரிவித்தார்.
மேலும், இஸ்லாமியரும் கத்தோலிக்கர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“எங்கள் வாழ்விடத்தை சவக்காலை ஆக்காதே”, “இரணைதீவு மக்களின் நல்வாழ்வைச் சிதைக்காதே”, “மத நல்லிணக்கத்தைச் சிதைக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.
இதேபோன்று யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துக் கத்தோலிக்க ஆலயங்களிலும் வெவ்வேறு நேரங்களில் இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.