இலங்கையர் இலங்கை வர வெளிவிவகார அமைச்சின் அனுமதி தேவையில்லை

இனி வரும் காலங்களில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் இதுவரை வெளிவிவகார அமைச்சின் அனுமதி பெற வேண்டியிருந்தது. அந்த அனுமதி இனி தேவையில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் இனிமேல் நாட்டிற்குள் நுழைய வெளி விவகார அமைச்சின் அனுமதி அவசியமில்லை என, கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இச்செயற்பாடு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமுலாக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் நிலை காரணமாக, கடந்த வருடம் (2020) வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள் உட்பட ஏராளமான இலங்கை வர முடியாமல் சிக்கியிருந்தனர். அதன் பின்னர் அவ்வாறு சிக்கியிருந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை நாட்டுக்கு அழைக்கும் செயற்றிட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்தது.
அதன் அடிப்படையில், தங்களது சொந்த செலவில் நாடு திரும்ப தயாராக உள்ளவர்கள், வெளிவிவகார அமைச்சின் முன் அனுமதியுடன் நாடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு குறித்த அனுமதி அவசியமில்லையென, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.