ஹரின் கைதுக்கு முன்னோடியாகவே ரிஷாத்தை மடக்கினர். உலபனே சுமங்கல தேரர் சுட்டிக்காட்டு.

“ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.”
இவ்வாறு ஊழல் எதிர்ப்பு முன்னணி அமைப்பின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஹரின் பெர்னாண்டோவைக் கைது செய்வதற்கான சூழலை அமைப்பதற்காக அரசு இந்த வெட்கக்கேடான செயலைச் செய்துள்ளது.
ரிஷாத் பதியுதீன், பஸில் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரிஷாத் பதியுதீனை அவருடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு சுதந்திரமாகச் செயற்பட பஸில் ராஜபக்ச அனுமதித்திருந்தார்.
ரிஷாத் பதியுதீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ரவூப் ஹக்கீம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததை நாங்கள் மறக்கவில்லை. இதனால் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20 ஐ நிறைவேற்றியிருந்தது என்பதையும் நாங்கள் மறக்கவில்லை” – என்றார்.