தர்மபுரம் பகுதியில் புதையல் அகழ முயற்சி; நால்வர் கைது.

கிளிநொச்சி மாவட்டம், தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அழகாபுரி பகுதியில் புதையல் அகழ முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேகநபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் வவுனியாவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணம், விசுவமடுப் பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என்று தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து புதையல் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்கானர் கருவி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைதானவர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.