4 மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்படவுள்ள சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா நான்கு மாதங்களுக்குப் பின் இன்று திறக்கப்படுகிறது. பார்வையாளர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பூங்காவை சுற்றிப்பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது. இந்நிலையில், தொற்று பரவல் குறைந்துள்ளதால் உயிரியல் பூங்காக்களை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து, பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேவேளையில், பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் முகக் கவசம் அணிவதுடன், 2 மீட்டர் தூரம் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி பூங்கா உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களும் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.