விதிமுறையை மீறுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2021/08/1629103636-police-media-spokman-L.jpg)
சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேணி, சுகாதார பரிந்துரைகளுக்கு அமையச் செயற்பட வேண்டும்.
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் சிலர் சமூக இடைவெளியைக் கவனத்தில்கொள்ளாது நடந்துகொள்கின்றனர் எனத் தகவல் கிடைத்துள்ளது.
சமூக இடைவெளி மற்றும் முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத மக்களுக்கிடையே கொரோனாத் தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
எனவே, சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். அத்துடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.