தமிழக ஆளுநரிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நளினி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும் என தமிழக ஆளுநரிற்கு எதிராக நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 09.09.2018 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை, இந்த நிலையில் தமிழக ஆளுநருக்கு எதிராக நளினி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது கோர்ட்டு அவமதிப்பு மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தசரா பண்டிகை விடுமுறைக்கு பிறகு ஒத்திவைத்தனர்.