என் வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத கூட்டமைப்பினர் எனக்கு அவப்பெயர் சூட்ட முயற்சி!

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்னைப் பழிவாங்கவும், அரசியலில் இருந்து வெளியேற்றவும் நல்லாட்சி அரசில் சிறையில் அடைத்தனர். ஆனால், நான் இவர்களின் சதித்திட்டத்தில் இருந்து மீண்டு மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று அதிகூடிய வாக்குகளைப் பெற்றேன். இதனைச் சகித்துக்கொள்ள முடியாத அவர்கள் தற்போது என்னை ஒரு கொள்ளைக்காரன், மண் கொள்ளைக் கும்பல் தலைவன் போன்று காட்ட முயற்சிக்கின்றனர்.”

– இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் அரச தரப்பு மட்டக்களப்பு மாவட்ட எம்.பியுமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் இன்று அரச தரப்பால் கொண்டுவரப்பட்ட 2021.03.10 மற்றும் 2021.04.06 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,

“என்னைப் போன்றவர்களை அரசியலில் இருந்து அகற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். சாணக்கியன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் என்னைப் பற்றி கூறியுள்ளார். என்னிடம் மண் அகழ்வுப் பத்திரம் இருப்பதாகப் பொய் கூறியுள்ளார். அதற்கான ஆதாரமாக சில விடயங்களை முன்வைத்துள்ளார். ஆனால், அது வேறு ஒரு நபர். அவர் நான்தான் என என்னைக் குற்றவாளியாக்க முயற்சிக்கிறார். சாணக்கியன் எம்.பியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மண் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்பதை மறந்துவிட்டார்.

மழை முன்னர் புற்றீசல்கள் கிளம்பி வரும். அதேபோன்று மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அமைச்சர் பஸில் ராஜபக்ச கூறியவுடன் அதில் போட்டியிடத் தயாராகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் இன்று முன்வந்து போராடுகின்றனர். மாகாண சபைத் தேர்தல் இல்லாமல் போகவும் அவர்களே காரணம்.

கடந்த காலத்தில் என்னைப் பழிவாங்கி என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற என்னை நல்லாட்சி அரசில் சிறையில் அடைத்தனர். ஆனால், மக்கள் மத்தியில் நான் பிரபல்யம் பெற்று அதிகூடிய வாக்குகளைப் பெற்று விடுத்தேன் என்பதற்காக அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது இவர்கள் என்னை ஒரு கொள்ளைக்காரன் போன்றும், மண் கொள்ளைக் கும்பல் தலைவன் போன்றும் காட்ட முயற்சிக்கின்றனர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.