கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி விரைவில் கைது?

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்த வண்ணம் உள்ளது. கட்சிக்குள் ஓபிஎஸ் ஒரு பக்கம் தனது இருப்பை காட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சசிகலாவின் அரசியல் ரீ என்ட்ரி கொடுக்கும் அழுத்தமும் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை உருவாக்கி வருகிறது.

இவற்றைவிட அவருக்கு மிகுந்த நெருக்கடியை கொடுப்பது கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை தான் என்கிறார்கள்.

2017ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணா பகதூரின் கை, கால்களைக் கட்டிப் போட்டு மர்ம நபர்கள் சிலர் கொடநாடு எஸ்டேட்டிலிருந்து பல முக்கிய ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த நடுஹட்டியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் சயான் மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழக்க, சயான் மற்றொரு சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

பல்வேறு திருப்பங்களும் மர்மங்களும் நிறைந்த இந்த வழக்கு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது பெரிதளவில் கண்டுகொள்ளப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ஆரம்பம் முதலே எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அந்த கோணத்தில் விசாரணைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவரான கூட்டுறவு இளங்கோவன் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என இரு மாதங்களுக்கு முன்னரே தகவல் வெளியாகி வந்தது.

அதன் தொடர்ச்சியாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ஒரு பக்கம் இருந்தாலும் கொடநாடு தொடர்பாக முக்கிய ஆவணங்களை கைப்பற்றும் பணி நடைபெறுகிறது என்கிறார்கள். இளங்கோவனை விசாரணைக்குள் கொண்டு வந்தால் எடப்பாடி பழனிசாமியை எளிதில் உள்ளே கொண்டு வரலாம் என திட்டமிடுவதாக கூறுகிறார்கள்.

முன்னாள் முதல்வர் வீட்டில் கொள்ளை நடக்கப் போகிறது என்ற தகவல் அப்போதைய உளவுத் துறைக்கு எப்படி தெரியாமல் போனது, தெரிந்தும் மறைக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறதாம்.

இந்த வழக்குக்குள் எப்படியும் எடப்பாடி கொண்டுவரப்படுவார், முகாந்திரம் இருந்தால் அவரை கைது செய்ய தயக்கம் காட்ட வேண்டாம் என்றும் மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வருகிறதாம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் திமுக சார்பாக வாக்குறுதிகள் அளித்தபோதே ஜெயலலிதா மரணம், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்த விசாரணை ஆகியவை குறித்து கட்டாயம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இருந்த போதும் எடப்பாடி பழனிசாமி மேல் ஏன் இவ்வளவு கோபம் என்று விசாரித்தால் முக்கிய தகவல் ஒன்றை கூறுகின்றனர் சித்தரஞ்சன் சாலை வட்டாரத்தினர்.

“திமுக ஆரோக்கியமான அரசியலையே முன்னெடுத்து வருகிறது. காழ்ப்புணர்ச்சி காரணமாக யாரையும் கைது செய்வதோ, விசாரணை நடத்துவதோ இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் தான் தண்டனை வழங்கப்போகிறது. இருப்பினும் ஒரு விஷயம் மட்டும் ஸ்டாலின் மனதில் வலியை ஏற்படுத்துவதாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது செய்த பலவற்றை மறந்தாலும் மெரீனாவில் கலைஞருக்கு இடம் கொடுக்காமல் அலைக்கழிக்க வைத்ததை ஸ்டாலின் மறக்கவில்லை. கலைஞர் உடலை அஞ்சலிக்கு வைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமியின் இல்லம் தேடிச் சந்தித்து அனுமதி கேட்டார் ஸ்டாலின். பல்வேறு கட்சித் தலைவர்களும் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் விடாப்பிடியாக மறுத்துவிட்டார். நீதிமன்றம் கடைசி நேரத்தில் கொடுத்த தீர்ப்பின் காரணமாகவே கலைஞர் மெரீனாவில் அண்ணாவுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் மட்டும் ஸ்டாலினின் மனதில் ஆறா வடுவாக உள்ளது” என்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.