மனச்சாட்சியே முக்கியம்! அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் நாளை முடிவு என்கிறார் கம்மன்பில.

“அமைச்சுப் பதவியைவிடவும், மனச்சாட்சியே முக்கியம். அதற்கு எதிராகச் செயற்பட முடியாது. அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டதையிட்டு கவலை அடையவில்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமைச்சுப் பதவி என்பது நிரந்தமற்றதொன்றென நான் இதற்கு முன்னரே குறிப்பிட்டுள்ளேன். பதவிகள் வரும்போகும். ஆனால், மனச்சாட்சி அப்படி அல்ல. மனச்சாட்சியின் பிரகாரமே நாம் செயற்பட்டுள்ளோம்.
எல்லா விடயங்களையும் வெளிப்படுத்தினோம். ஆனால், நாம் இங்கும் பொய்யுரைக்கவில்லை. உண்மை பேசினால் வலிப்பவர்கள்தான் எம்மை விரட்டியுள்ளனர். நாம் மக்களின் மடியில்தான் விழுவோம். மக்களுடன் இணைந்து தாய் நாட்டுக்காகப் போராடுவோம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாளை முடிவெடுக்கப்படும்” – என்றார்.