பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடு?

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் தற்போது ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகள் அல்லது சுகாதார வழிகாட்டுதல்கள் விதிக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
இதன்படி ,கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், வைரஸ் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அதிகளவில் நாடியுள்ளனர் என்றும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் பெரும்பான்மையானவர்கள் முதன்மைத் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட உடல்நலம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் நல்ல சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக தடுப்பூசி போடப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில் பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக ஜனவரி 25 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாகவும், போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ,சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொது இடங்களாக அடையாளம் காணப்பட்ட இடங்களுக்குள் நுழைவதற்கு முழுமையாக தடுப்பூசி போடுவது அவசியமாகும் எனவும் எதிர்காலத்தில் இது மாறக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.