அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேச்சு: இளையராஜாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதரவு

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா எழுதிய முன்னுரைக்கு அரசியல் கட்சியினர், சமுக வலைதளவாசிகள் ஒருசிலர் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில், இளையராஜா செய்த குற்றம் என்ன என்று அவருக்கு ஆதரவாக பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், திமுகவை தலித்துக்கு எதிரான கட்சி என்றும் விமர்சித்துள்ளார்.

அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு ‘அம்பேத்கர் அன்ட் மோதி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் முயற்சிக்கிறது.

அம்பேத்கர், நரேந்திர மோடி ஆகிய இரண்டு ஆளுமைகளுக்கும் இடையிலான ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகளையும் இந்த நூல் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த இரண்டு ஆச்சரியமூட்டும் ஆளுமைகளும் சமூகரீதியில் அதிகாரமற்ற மக்கள் எதிர்கொள்ளும் சோதனைகளை வெற்றிகொண்டனர். இருவருமே வறுமையையும், ஒடுக்கும் சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அவற்றை உடைத்தெறிந்தவர்கள். இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். ஆனால் இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்லர். இருவருமே செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு அவர் எழுதிய முன்னுரைக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். சமுக வலைதளங்களிலும் இளையராஜாவை விமர்சித்து எழுதப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இளையராஜா என்ன குற்றம் செய்தார்? அறிவாலயம் மற்றும் அதன் சுற்றத்துக்குப் பிடிக்காத கருத்து, குற்றமா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது, அதையே இளையராஜாவுக்கு மறுத்ததன் மூலம், திமுக தனது தலித் விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தன்மையைக் காட்டியுள்ளது” என அவர் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.