தேர் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு.. நாகப்பட்டினம் அருகே சோகம்

நாகை அருகே உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் தேர் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகிகள் மற்றும் உறவினர்களிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்காட்டாங்குடி உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் தேரோட்டம் நள்ளிரவு நடைபெற்றது. தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் தீபராஜன் என்பவரது குடும்பம் காலங்காலமாக இருந்துவருகிறது. தேர் தெற்கு வீதி என்னும் இடத்தில் திரும்பும்பொழுது 10 அடி தூரத்தில் சக்கரத்தில் சிக்கி முட்டுக்கட்டைபோடும் தொழிலாளியான தீபராஜன் படுகாயம் அடைந்தார்.
படுகாயமடைந்த அவரை மீட்டு உறவினர்கள் திருமருகலில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். ஆனால், தேரின் ராட்சத சக்கரமானாது தீபராஜின் வயிற்றில் ஏறி இறங்கியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சப்பர விபத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாகை மாவட்டத்தில் வழிபாட்டு தளங்களில் தேர், சப்பரங்கள் இழுக்க முறையான அனுமதி பெற வேண்டும் என எஸ்பி ஜவஹர் உத்தரவிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து உத்திராபதிஸ்வரர் ஆலய நிர்வாகிகள் திருமருகல் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் முறையான அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேர் விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. பிரேத பசிசோதனைக்காக தீபராஜன் சடலம் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கோவில் நிர்வாகத்தினர், உறவினர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் திருக்கண்ணபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.