காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டிய வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டி உதவி செய்த குற்றச்சாட்டில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்தது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலிக் மீது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இந்நிலையில், குற்றவாளி யாசின் மாலிக்கிற்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு உறுதியான நிலையில் குற்றவாளி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.