இரண்டு வாரங்களில் ரூ.104 பில். அச்சடிப்பு? நிதியியல் புள்ளிவிபரங்களில் தகவல்.

இலங்கை மத்திய வங்கி கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் மேலும் 104 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ஒரு இலட்சம் கோடி ரூபாவை அச்சிட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள பின்னணியில், கடந்த மே 11ஆம் திகதிக்கும் மே 24ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய வங்கி இந்தத் தொகையை அச்சிட்டுள்ளது.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரதமர், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பணவீக்கம் 40% ஐ தாண்டும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார். அரசாங்கம் வரிகளை அதிகரிக்காவிட்டால் அரசாங்க செலவினங்களுக்கு பணத்தை அச்சிட வேண்டியிருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க முன்னர் தெரிவித்திருந்தார்.