கிளிநொச்சியில் 190 கிலோ கேரள கஞ்சா மீட்பு – மன்னாரை சேர்ந்த ஒருவர் கைது.

கிளிநொச்சி விவேகநந்தாநகர் பகுதியில் 190 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நேற்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபர் மேற்குறித்த பகுதியில் வாடகைக்கு வீடு பெற்று வசித்து வந்துள்ளதாகவும், வியாபார நோக்கத்திற்காகவே மன்னாரிலிருந்து அங்கு தங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 190 கிலோ எடையுடையது எனவும், அதன் இலங்கை பெறுமதி 5 கோடி மதிக்கத்தக்கது எனவும் கூறப்படுகிறது.
விசாரணை மேற்கொண்டுவரும் விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரையும், கஞ்சா பொதிகளையும், பயன்படுத்தப்பட்ட சொகுசு காரினையும் கிளிநொச்சி பொலிசாரின் உதவியுடன் சட்டநடவடிக்கைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.