விசாரணை கைதிகளை அழைத்து வந்து மரணமடையும் வரை தாக்குவதா? காவல்துறையை கடுமையாக சாடிய உயர் நீதிமன்றம்!

விசாரணை கைதிகளை அழைத்து வந்து இரக்கமில்லாமல் மரணமடையும் வரை தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது என காவல்துறையை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல்துறை சீர்த்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.
மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டி.ஜி.பி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சி சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைக்கக் கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுதந்திரமான நபர்களை ஏன் நியமிக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உள்துறை செயலாளர், டிஜிபி அடங்கிய மாநில குழு மற்றும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அடங்கிய மாவட்ட குழுக்களை அமைத்த சட்டத்தை திருத்த போதிய அவகாசம் வழங்கியும் அதனை அரசு திருத்தவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

உயர் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அவர்களே எப்படி விசாரிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் காவல் நிலைய மரணங்களில் 2018 கணக்கின் படி, தென் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் காவல் விசாரணையின் போது 76 மரணங்கள் நடந்தும், ஒரு வழக்கில் கூட தண்டனை விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

எனவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணித்தாலும், சட்டத்தை எதிர்த்து வழக்கு நிலுவையில் இல்லை என்பதால், இந்த வழக்கின் உயர் நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதீபதிகள், எந்த காரணத்திற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததோ அதற்கு எதிராக அரசின் சட்டம் உள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் நீதிபதியை தலைவராக நியமிக்க முடியாது என கூற முடியாது என்றும் விளக்கம் அளித்தனர்.

விசாரணை கைதிகளை அழைத்து வரும்போது இரக்கமில்லாமல் தாக்குவது, அதனால் ஏற்படும் மரண குற்றங்கள் ஆகியவை காவல்துறையின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது என்றும் கடுமையாக சாடினர்.

ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க அரசு அஞ்சுகிறதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காவல்துறை போர்வையில் காவல்துறையிலேயே கும்பலை உருவாக்குகிறார்கள் என்றும், அவற்றின் மூலம் காவல் மரணம், நில அபகரிப்பு, கொலை போன்றவற்றில் ஈடுபடுகின்றனர் என்றும் வேதனை தெரிவித்தனர்.

இதுபோன்ற கொடுங்குற்றங்களில் நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு அவசியம் என்றும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி அமைத்தால் அது அரசின் நல்ல நிர்வாகத்தை தான் காட்டும் என்றும், அரசுக்கு எதிரான உத்தரவாக அல்லாமல், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிரானதாக மட்டுமே கருத வேண்டுமென தெரிவித்து, மாநில அரசே நல்ல முடிவெடுத்து முறையான புகார் ஆணையத்தை அமைக்கும் என நம்புவதாக தெரிவித்தனர்.

காவல் நிலைய விசாரணையில் விக்னேஷ் மரணம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் வந்தததாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரத்தில் முதல்வர் பிறப்பித்த உத்தவின்படி அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், தாமாக முன்வந்து வழக்கை எடுக்கவில்லை என விளக்கமளித்தனர்.
இதையடுத்து வழக்கு விசாரணை மீண்டும் ஜூன் 24ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.