ரஞ்சனுக்குப் பெரும் அநீதி; மன்னித்து விடுவியுங்கள்! ஜனாதிபதியிடம் கோரிக்கை.

“ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையிலுள்ள அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும்” – என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவைச் சிறைச்சாலையில் சென்றுபார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ரஞ்சன் ராமநாயக்கவுக்குக் கடுமையான தண்டனை கிடைத்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியை அரசு மீள் பரிசீலிக்கும் என நம்புகின்றேன். அவர் மேலும் ஒன்பது மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்கவுள்ளதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கின்றேன்.

ரஞ்சன் ராமநாயக்க தனது இலட்சியங்கள் மற்றும் இலக்குகளைக் கைவிடவில்லை. தற்போது தனது கல்வி இலக்கை கடுமையாகப் பின்பற்றி வருகின்றார்.

சிறையிலிருந்து வெளிவந்தவுடன் ரஞ்சன் ராமநாயக்க தண்டனைக்கு முன்னர் எம்.பியாக இருந்ததைப் போன்று தொடர்ந்தும் மக்களுக்குச் சேவையாற்றுவார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.