யாழ். ஊடகத் துறைத் தலைவர் பேராசிரியராகப் பதவி உயர்வு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சி.ரகுராம் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலைப் பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த கலாநிதி சி. ரகுராமின் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்த, மூதவையால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கை, நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின் அடிப்படையில், ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் கலைப்பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சி. ரகுராம் ஊடகக் கற்கைகளில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.