ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிய நபர் கைது!

மக்கள் போராட்டத்தின் போது கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த ஜனாதிபதியின் கொடியை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தின் போது பொதுமக்களுடன் ஜனாதிபதி செயலகத்திற்குள் புகுந்த சந்தேக நபர், ஜனாதிபதியின் கொடியை திருடிச் சென்றுள்ளார்.
அந்த நபர் கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு நடமாடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அதன்பிறகு, அந்த நபர் கொடியை படுக்கை விரிப்பாக பயன்படுத்தியதுடன், அதை எரித்து அழிக்கவும் எண்ணியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ பதிவாகியுள்ளது.
இதேவேளை, களுதந்திரி என்ற சந்தேக நபர் துறைமுக பாதுகாப்பு அதிகாரி என்பதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். அவர் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவீதிய பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளதுடன் ஐம்பத்து நான்கு வயதான அவர் மாலம்பே பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.